பணத்தின் அருமை பெருமை :
சிந்திக்க:
பணம் - பெருமை - அந்தஸ்து - செல்வாக்கு, கம்பீரம், புகழ் என அனைத்தையும் தருகிறது. அதனால் பணத்திற்கு முக்கியத்துவம் நம் முன்னோர்கள், மூதாதையர்கள் என அனைவரும் மரியாதை கொடுத்து கடைசியில் நாம் பணத்திற்கு முக்கியத்துவம் தருவதை விட்டுவிட்டு அதில் மிதப்பவர்களுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்துவிட்டோம்.
பணத்தின் பெயர் சொல்லி பல பழமொழிகள் உதாரணத்திற்கு வந்துவிட்டது.
அதில் சில
'' பணம் உள்ளவன் பாட்டாளி
பணம் பாதாளம் வரை பாயும்
பணம் இல்லை என்றால் நீ செல்லா காசு
பணம் பந்தியிலே
பணம் இல்லை என்றால் உன்னை ஒருவருக்கும் தெரியாது
பணம் இருப்பவர்கள் வீட்டில் பிணம் கூட அழகு "
என்று பிள்ளைகள் வளரத் தொடங்கும் முன்பே பணத்தின் அருமை பெருமைகளைச் சொல்லி சொல்லி பணம் தேடல் என்னும் விதை எல்லோர் மனதிலும் நுழைந்தாகிவிட்டது.
விளைவு:
பணத்திற்காக அதை அடைவதற்காக தர்மத்தை மீறி நடக்க ஆரம்பித்ததன் விளைவு தான் இந்த யுகத்தில் நடந்து கொண்டிருக்கிறது
நிம்மதி, மகிழ்ச்சி, அன்பு, பாசம், பந்தம், குடும்ப பிணைப்பு, ஒற்றுமை, பாவம், புண்ணியம் என அனைத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டு பணம் நம்மை பார்த்து சிரிக்கிறது.
பணம் எல்லோருக்கும் மிக மிக முக்கியத் தேவை. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை அடைவதர்க்காக எதை செய்யவும் தயங்குவதற்கு நாம் அச்சம் கொள்ள வேண்டும்.
இருப்பினும் பணத்தை நோக்கியே ஓடி வாழ்க்கை தொலைத்து கொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க இயலுமா?
பணத்தால் இறைவனை அடைய முடியாது. இறைவனுக்கு காணிக்கையாக எத்தனை கோடி செலுத்தினாலும் அவருக்கு பெரிதல்ல. இறைவனுக்கு கள்ளமிலாது தூய மனமும் பக்தியும் தவிர வேறு தேவை இல்லை என்பதை மறந்து விடக்கூடாது.
பணம் மனித நேயம், மாண்பு, மரியாதை என அனைத்தையும் தர மறுக்கச் செய்கிறது.
குடும்பம், வாழ்க்கை என்ற பந்தத்தை இனி வரும் காலங்களில் பார்க்க முடியுமா?
அன்பு , பாசம், என்ற வார்த்தைகளும் காணாமல் போய் கொண்டு இருக்கிறது.
ஒருவர் மேல் ஒருவர் காட்டும் பரஸ்பர அன்பு, பக்தி, மரியாதை, நம்பிக்கை என அனைத்தையும் இனி வரும் காலங்களில் தொலைத்துவிட்டு தேடப்போகிறோம் என்பது மட்டும் நிஜமாகிவிடக் கூடாது.
வாழ்க்கையில் கடைசியில் தான் தெரிய வரும். பணம் தேடி தேடி ஒடினோமே இப்போது மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோமே என்று. அப்போது காலம் கடந்து இருக்கும்.
பணம், செல்வம், சொத்து என அனைத்தையும் ஏராளம் சேர்த்துவிட்டு ஒன்றிரண்டு[ சந்ததிகள்] என பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஏராளம் தந்து விட்டு அவர்களுக்கு [ நம் தலைமுறையினருக்கு] எந்த தேடலை நாம் தரப் போகிறோம்.
சிந்தித்தால் மனம் கனக்கிறது. நாம் பணத்துடன் மட்டுமின்றி மன நிறைவுடனும் மகிழ்வுடனும் குடும்பச் சுமைகளைச் சுமந்து ஆரோக்கியம் பண்பட்டு நம் தலைமுறைக்கு விடியலை புதிதாக உருவாக்க வேண்டும் என்பதே என் ஆதங்கம் -- என் அவா -- என் கனவும்....
அடுத்து::திருமணம் இனிதே நடைபெற
Comments
Post a Comment